×

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் 8 விமான சேவைகள் ரத்து: சென்னையில் பயணிகள் தவிப்பு

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 2வது நாளாக நேற்றும் திடீர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு இணைந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 7ம் தேதி இரவு கேரளா உட்பட சில மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏர் இந்தியா கேபின் குழு ஊழியர்கள் திடீர் விடுப்புகள் எடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாத காரணத்தால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய் நள்ளிரவு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால் நேற்று இரண்டாவது நாளாக, சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து, பணிக்கு வராத காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாமல் 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதைப்போல் நள்ளிரவு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் விமானம், நேற்று மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம், இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை திருவனந்தபுரம் செல்லும் விமானம், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலையில் புறப்பட்டுச் செல்லும் விமானம், நேற்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் செல்லும் விமானம், இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் 8 விமான சேவைகள் ரத்து: சென்னையில் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Air India Express ,CHENNAI ,Chennai airport ,Air India ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன...